சென்னை கடற்கரை ரோட்டில் பந்தய பணம் கட்டி `பைக் ரேஸ்' அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி கடும் எச்சரிக்கை

    சென்னை கடற்கரை ரோட்டில் பந்தய பணம் கட்டி `பைக் ரேஸ்'
அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது
கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி கடும் எச்சரிக்கை

சென்னை, ஏப்.13-

சென்னை கடற்கரை ரோட்டில் `பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தய பணம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

`பைக் ரேஸ்'

சென்னை கடற்கரை ரோட்டில் அண்ணா சதுக்கத்தில் இருந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பந்தய பணம் கட்டி வாலிபர்கள் சிலர் `பைக் ரேஸ்' நடத்துவதாகவும், இதனால் விபத்துக்கள் நடப்பதாகவும் போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இவ்வாறு `பைக் ரேஸ்' செல்பவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி செல்வார்கள். இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையுறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கடற்கரை ரோட்டில் `பைக் ரேஸ்' நடக்கிறதா? என்பதை கண்காணிக்கும்படி கூடுதல் கமிஷனர் ரவி உத்தரவிட்டார். இதன்பேரில், கிழக்கு கடற்கரை ரோட்டை போக்குவரத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது `பைக் ரேஸ்' நடத்திய 9 வாலிபர்கள் பிடிபட்டனர்.

பறிமுதல்

அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், சென்னையில் `பைக் ரேஸ்' நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் மீது வழக்கு போட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் கோர்ட்டு மூலம் வசூலிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் கமிஷனர் ரவி எச்சரிக்கை விடுத்தார்.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...