முல்லை பெரிய ஆறு - நீர் தேக்கம் கண்களில்....

முல்லைப் பெரியாறு பற்றி அகில இந்திய அளவில்
புயலைக் கிளப்பிவிட்டு – தமிழ் நாட்டை
பைத்தியக்காரர்கள் வசிக்கும் இடம் என்று பேச
வைப்பதில் வெற்றி பெற்று விட்டனர் கேரளத்தவர்.

மீடியாக்களில்,டெல்லியில், அகில இந்திய அளவில்
கேட்கிறார்கள் -பலமாகக் கேட்கிறார்கள் !

“116 வருட சுண்ணாம்பு அணை – இன்னும்
எவ்வளவு நாள் தாங்கும் ?


தங்கள் இடத்திலேயே -
தங்கள் செலவிலேயே -
புதிய அணையைக் கட்டி,
தமிழ் நாட்டிற்கு அதே அளவு தண்ணீரைத் தருவதாக
கேரளா சொல்கிறதே – ஒப்பந்தம் எழுதிக்
கொடுக்கிறோம் என்கிறார்களே.
இதை ஏற்றுக் கொள்ள தமிழ் நாடு ஏன் மறுக்கிறது ?
இது என்ன வீண் பிடிவாதம் ?
இது என்ன பைத்தியக்காரத்தனம் ?”

இங்கு தான் தமிழ்நாடு ஏமாந்து கொண்டிருக்கிறது.
கேரளா இதுவரை செய்த அநியாயங்கள்,
புதிய அணை கட்டி இனி செய்ய
உத்தேசித்திருக்கும் அயோக்கியத்தனங்கள் -

இவை எதுவுமே வெளி உலகுக்குத் தெரியவில்லை.
ஏன் தமிழ் நாட்டிலேயே – சென்னையிலேயே கூட,
படித்தவர்கள் பலருக்கு கூட தெரியவில்லை !

புதிய அணை கட்டுவதில் என்ன தவறு ? -அதான்
அதே அளவு தண்ணீர் தருகிறேன் என்கிறார்களே
என்று தமிழர்களே கேட்கிறார்கள்.
தமிழ் நாளிதழ்களும், அரசியல் கட்சிகளும்
தொலைக்காட்சிகளும் கூட தமிழ் மக்களை
தயார் படுத்துவதில் தவறி விட்டன என்று தான்
சொல்ல வேண்டும்.
இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும்.

புதிய அணை கட்டுவதாகச் சொல்வதில் இருக்கும்
சதி பற்றி விவரமாக அகில இந்திய அளவில்
எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வலைத்தளத்தைப் படிப்பவர்களுக்காக -
நான் எனக்குத் தெரிந்ததை சுருக்கமாக
கீழே தருகிறேன்.

முல்லைப் பெரியாறு அணை கட்டப்பட்டது
பிரிட்டிஷ் ஆண்ட காலத்தில் - 1895ல்.
அப்போது இந்த அணை கட்டும் இடம் திருவாங்கூர்
சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக
கருதப்பட்டது (உண்மை அது அல்ல.தமிழ் நாட்டின்
வரையரைக்குள் தான் இருந்தது)
எனவே பிரிட்டிஷார்- திருவாங்கூர் மஹாராஜாவுடன்
இந்த அணை கட்டப்படும், மற்றும் அதன் நீர்ப்பிடிப்பு
பகுதியான சுமார் 8000 ஏக்கர் நிலத்தை
999 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்து (ஆண்டுக்கு
ரூபாய் 40,000/- குத்தகைப் பணம் ) இந்த
அணையை 1887ல் கட்ட ஆரம்பித்து 1895ல்
கட்டி முடித்தனர்.

idukki dam
IDUKKI DAM

இதில் வேடிக்கை என்னவென்றால், இதில்
அடிப்படையான பெரியாறு உற்பத்தியாவது
தமிழ் நாட்டில் தான். அணையும் தமிழ் நாட்டிற்கு
சொந்தமானது. அதை நிர்வகிப்பதும் தமிழ் நாடு தான்.
ஆனால் இடம் மட்டும் கேரளாவிற்கு சொந்தம்.
அதிகாரம் செலுத்துவதும் அவர்களே !

இந்த அணையின் உயரம்-கொள்ளளவு -152 அடி.
இதன் மூலம் பாசனம் பெறும் நிலம் –
சுமார் 2,08,000 ஏக்கர்.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய
4 மாவட்டங்களைச் சேர்ந்த 10 லட்சம் விவசாயிகள்
பாசனத்திற்கும், 60 லட்சம் மக்கள் குடிநீருக்கும்
இந்த அணையை நம்பி இருக்கிறார்கள்.
இந்த அணை பறிக்கப்பட்டால் – இத்தனை இடங்களும்
பாலைவனங்கள் ஆகும். இத்தனை ஜனங்களும்
பிழைப்பு பறிபோய் – பிச்சைக்காரர்கள் ஆவார்கள்.

பிரச்சினை ஆரம்பித்தது எப்படி ? எப்போது ?

கேரளா, இதற்கு சுமார் 50 கிலோமீட்டர் கீழே,
இடுக்கியில் 1976ல் ஒரு அணையும் நீர்
மின்நிலையமும் கட்டியது. பின்னர் தான்
ஆரம்பித்தன அத்தனை தொல்லைகளும்.

பெரியாறு அணையின் மொத்த கொள்ளளவே
15.66 டிஎம்சி தான்.அதிலும் சுமார் 10 டிஎம்சியை
தான் பயன்படுத்த முடியும்.
(104 அடி வரை டெட் ஸ்டோரேஜ் .)

ஆனால் இடுக்கி இதைப் போல் 7 மடங்கு பெரியது.
கொள்ளளவு 70 டிஎம்சி.
பெரிய அணையைக் கட்டி விட்டார்களே தவிர அது
நிரம்பும் வழியாகக் காணோம். 3 வருடங்கள்
பொறுத்துப் பார்த்தார்கள். பெரியாறு வருடாவருடம்
நிரம்பிக் கொண்டு இருந்தது. ஆனால் இடுக்கி
நிரம்பவே இல்லை.

அப்போது போடப்பட்ட சதித்திட்டம் தான் -
பெரியாறு அணைக்கு ஆபத்து என்கிற
குரல் -கூக்குரல்.
சுண்ணாம்பு அணை உடைந்து விடும்.
அதிலிருந்து வெளிவரும் நீரால் 35 லட்சம்
மக்கள் செத்துப் போவார்கள். எனவே
உடனடியாக புதிய அணை கட்டுவதே தீர்வு !

புதிய அணையினால் அவர்களுக்கு என்ன லாபம் ?
மேலே இருக்கும் பழைய அணையை இடிப்பதால்,
நீர்பிடிப்பு பகுதியிலிருந்து அத்தனை நீரும் நேராக
இடுக்கிக்கு வந்து அதை நிரப்பும்.

சரி நிரம்பட்டுமே. நல்லது தானே !
அதான் தமிழ்நாட்டுக்கு இதே அளவு
தண்ணீர் தருகிறேன் என்று சொல்கிறார்களே
என்று உடனே மக்கள் கேட்கிறார்க்ள்.

அங்கே தான் இருக்கிறது அவர்கள் சாமர்த்தியம்.
பெரியாறு அணை இருப்பது கடல் மட்டத்திலிருந்து
2709 முதல் 2861 அடி உயரம் வரை. இதிலிருந்து
மலையைக் குடைந்து குகைப்பாதை வழியாக
தண்ணீர் தமிழ் நாட்டை நோக்கி கொண்டு வரப்படுகிறது.

புதிய அணையை கட்டப்போவது 1853 அடி
உயரத்தில்.இந்த அணை கட்டப்படும் உயரத்திலிருந்து
தமிழ் நாட்டிற்கு தண்ணீரைத் திருப்பி விட முடியாது.
நமக்கு பெரியாறு அணையிலிருந்து நீர் எடுத்து வரும்
பாதை இதை விட உயரத்தில் ஆரம்பித்து, ஒரு கிலோ
மீட்டர் பயணத்திற்கு பிறகு 5704 அடி நீளமுள்ள -
மலையைக் குடைந்த குகை வழியாக திசை மாறி
வந்து பின்னர் கீழே வைகையில் கலக்கிறது.
அணையைக் கட்டிய பிறகு,
இவர்கள் உண்மையாகவே விரும்பினாலும் நீரைத்
திருப்ப முடியாது. மேலும் புதிய அணையிலிருந்து
ஆண்டு முழுவதும் நீர்மின்சாரம் உற்பத்தி செய்ய
நீரை வெளியேற்றிக் கொண்டே இருக்கப் போகிறார்கள்.
எனவே அணை எப்போதுமே முழுவதுமாக நிரம்பி
இருக்காது.தமிழ் நாட்டிற்கு தண்ணீர் நிச்சயமாக
கிடைக்காது.

புதிய அணையினால் தமிழ் நாட்டிற்கு பயன் இல்லை -
புரிகிறது.

ஆனால் பழைய அணை சுண்ணாம்பு அணை -
எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும்.
35 லட்சம் மக்கள் செத்து விடுவார்கள் என்கிறார்களே -
பயம் உண்மையானது போல் தோன்றுகிறதே ?

அயோக்கியத்தனம்.
வடிகட்டிய அயோக்கியத்தனம்.

முதலாவதாக -
பெரியாறு அணை உடைந்தால் தண்ணீர் -
மலைப் பள்ளத்தாக்குகள் வழியாகப் பாய்ந்து -
நேராக கீழே உள்ள இடுக்கி அணையைத் தான்
வந்தடையும்.
பெரியாறு அணையிலிருந்து அதன் முழு நீரும்
(10 டிஎம்சி) ஒரே நேரத்தில் வெளியேறினாலும்,
நேராக அதைப்போல் 7 மடங்கு கொள்ளளவு
உடைய இடுக்கி அணையைத் தான் வந்தடைய
போகிறது. இடையில் எந்த நாடு, நகரமும் இல்லை.
வாதத்திற்காக இடுக்கி அணை ஏற்கெனவே நிரம்பி
இருந்தாலும் – வெளியேறும் நீர் பெரியாறு
அணையிலிருந்து இடுக்கி வந்து சேர 4 மணி நேரம்
ஆகும். அதற்குள்ளாக இடுக்கியிலிருந்து
தேவையான நீரை வெளியேற்றி விட முடியும் !
எனவே வெள்ளத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்
என்கிற பேச்சே அபத்தமானது.

இரண்டாவதாக -

1976ல் இடுக்கி அணையை கட்டினார்கள்.
1979ல் பெரியாறு அணை உடையப்போகிறது
என்று குரல் எழுப்பினார்கள்.
பயத்தைக் கிளப்பினார்கள்.
சுப்ரீம் கோர்ட் வரை போனார்கள்.
2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவை
அமைத்தது. நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி
அணை அனைத்து விதங்களிலும் பலப்படுத்தப்பட்டது.

கேரளா சொல்வது போல்
இது வெறும் சுண்ணாம்பு அணை அல்ல.
ஏற்கெனவேயே முதல் தடவையாக 1933ல்
40 டன் சிமெண்ட் கலவை சுவரில் துளையிட்டு உள்ளே
செலுத்தப்பட்டது. மீண்டும் 1960ல் 500 டன் சிமெண்ட்
உள் செலுத்தப்பட்டது.

2000ஆவது ஆண்டு சுப்ரீம் கோர்ட் சென்ற பிறகு -
நிபுணர் குழுவின் ஆலோசனைப்படி -
லேடஸ்ட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி,
கேபிள் ஆன்கரிங் முறையில் அணையுள் கான்க்ரீட்
கலவை செலுத்தப்பட்டது. வெளிப்புறமாக -
ஒரு கவசம் போல், கிட்டத்தட்ட புது அணையே போல்,
கான்க்ரீட் போடப்பட்டு, ஒரு புத்தம்புதிய கான்க்ரீட்
அணையே உருவாக்கப்பட்டு விட்டது.

கீழே உள்ள வரைபடத்தைப்
பார்த்தால் நன்றாகப் புரியும்.






இதன் பிறகு தான், 27/02/2006 அன்று,
சுப்ரீம் கோர்ட், இனி அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை
என்பதை நிபுணர் குழுவின் மூலம் உறுதி செய்துகொண்டு -
156 அடிவரை தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம்
என்று அனுமதியே கொடுத்தது.

விட்டார்களா நமது கேரள சகோதரர்கள் ?
மீண்டும் சதி. ஒரு மாதத்திற்குள்ளாக,
கேரள சட்டமன்றத்தில் புதிய சட்டம்
இயற்றி, சுப்ரீம் கோர்ட் உத்திரவையே செல்லாததாக்கி
விட்டார்கள்.

வழக்கம் போல் தமிழன் இளிச்சவாயன் ஆகி விட்டான்.

மீண்டும் கோர்ட் பின்னால் அலைகிறோம்.
இப்போது, இன்னும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டின்
பரிசீலனையில் இருக்கும்போதே -
தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக
இருக்குமோ என்கிற தவிப்பில் - மீண்டும் நாடகம்
ஆடுகிறார்கள். அணைக்கு ஆபத்து -புதிய அணை
கட்ட வேண்டும் என்று.

பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கிறார்கள்.
பிரதமரை போய்ப் பார்க்கிறார்கள்.
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்.
பந்த் நடத்துகிறார்கள்.
இப்போதைக்கு அவர்கள் குரல் தான் பலமாகக்
கேட்கிறது. வெளிமக்கள் அவர்கள் பக்கம் நியாயம்
இருக்கிறது என்று நினைக்கத் தொடங்கி விட்டார்கள்.

தமிழ் நாடு ஏமாந்தது போதும்.

‎'போர்க்குற்றவாளி' ராஜபக்சேவுக்கு எதிரான இயக்கம்: கையெழுத்திட மறுத்தாரா விஜய்?

சென்னை: இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் லட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என குற்றம்சாட்டப்பட்டுள்ள ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்திட நடிகர் விஜய் மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் குற்றம் சாட்டியுள்ளது.

'இனப்படுகொலை குற்றவாளி' ராஜபக்சே மற்றும் அவருக்கு துணை நின்ற கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கையழுத்து இயக்கம் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது.

இந்த இயக்கத்துக்கான தொடக்க நிகழ்ச்சியை கடந்த வாரம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திங்கள்கிழமை திரையுலகைச் சேர்ந்த சத்யராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

மறுத்தாரா விஜய்?

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னியரசு தலைமையில் மாநில நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் நண்பன் படப்பிடிப்பில் விஜய் இருப்பதாக தகவல் கிடைத்ததால் அங்கு சென்று விஜய்யிடம் கையெழுத்து கேட்டனர்.

ஏன்? எதற்கு? என்று பல கேள்விகளைக் கேட்ட விஜய், கடைசியில் கையெழுத்துப் போட மறுத்துவிட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வன்னியரசு கூறுகையில், "நாங்கள் கையெழுத்து கேட்டபோது பல விளக்கங்கள் கேட்டார் விஜய். நாங்களும் சொன்னோம். ஆனால் அவரோ கடைசியில், 'இல்லை, நான் கையெழுத்துப் போட மாட்டேன். எனக்கு விருப்பம் இல்லை,' என்றார். மேலும் எங்களை அனுப்புவதில் குறியாக இருந்தார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்ரேசேகரனை தொடர்பு கொண்டோம்.

உடனே கோபமாக, 'நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். தேவை என்றால் நாங்களே இதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்துவோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள்,' என்றார்.

"ராஜபக்சேவை இனப்படுகொலையாளி என உலகமே சொல்ல ஆரம்பித்துள்ளது. அதற்கு வலு சேர்க்கத்தான் கொலை குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர். இதிலிருந்தே தெரிகிறது, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதாகக் கூறி மக்களை எந்த அளவு விஜய்யும் அவர் தந்தையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது!", என்றார் வன்னியரசு.

விஜய் விளக்கம்

ஆனால் இதனை விஜய் தரப்பில் முழுவதுமாக மறுத்துள்ளனர். 'வன்னியரசு சொல்வதில் உண்மையில்லை. இதுகுறித்து நடிகர் விஜய்யே விளக்கம் தெரிவிப்பார்' என்று விஜய் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Posted in | 0 comments

தஞ்சையில் பசுமை பயணம்.

தஞ்சாவூர், ஜூலை 22: பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள சர்வதேச கருத்தரங்கையொட்டி, தஞ்சையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) 6,000 பேர் பங்கேற்கும் பசுமைப் பயணம் நடைபெறவுள்ளது. அதன் முடிவில் நகரில் 5,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.
...பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வரும் 27-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை "வளர்ந்து வரும் பசுமை தொழில்நுட்பம்' என்னும் தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
கருத்தரங்கை குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தொடக்கிவைத்து உரை நிகழ்த்துகிறார். உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்தரங்கில் பங்கேற்கின்றனர்.
இந்தக் கருத்தரங்கையொட்டி, மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பெரியார் மணியம்மை பல்கலை. மற்றும் கவின்மிகு தஞ்சை அமைப்பின் சார்பில், ஜூலை 24-ம் தேதி 6,000 பேர் பங்கேற்கும் பசுமைப் பேரணி நடத்தவும், தஞ்சை நகரில் 5,000 மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டது.
அதற்கான ஆலோசனைக் கூட்டம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது.
கூட்டத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலர் காந்தி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் ராதிகா மைக்கேல், பொறியாளர் முத்துக்குமார், முன்னாள் அரசு வழக்குரைஞர் நமச்சிவாயம், சில்வர்கிரீன் அக்ரோ புராடக்ட் நிறுவனத் தலைவர் பன்னீர்செல்வம், உயிரி ஆய்வு மையத் தலைவர் பழனியப்பன், எக்ஸ்னோரா தலைவர் கே. சாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு தஞ்சை திலகர் திடலிலிருந்து பசுமைப் பேரணி தொடங்கி, முக்கிய தெருக்கள் வழியாக காலை 9 மணிக்கு அரசு ஐடிஐ திடலில் நிறைவு செய்யவும், இந்தப் பேரணியில் பங்கேற்பவர்கள் இயற்கையை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள்களின் பயன்பாட்டுக்கு எதிராகவும், மழை நீரை சேமிக்கவும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிக் கொண்டும், எழுதப்பட்ட பதாகைகளை எடுத்துச் செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், பேரணியில் பங்கேற்றவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி, மாவட்ட வன அலுவலக வளாகம், விமானப் படை வளாகம் ஆகியவற்றுக்குச் சென்று 5,000 மரக்கன்றுகள் நடவுள்ளனர்.
நடப்படும் மரக்கன்றுகளை தொடர்ந்து தண்ணீர்விட்டு பாதுகாப்பதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தஞ்சை லயன்ஸ் சங்கங்கள் சார்பில், 3,000 மரக்கன்றுகளும், சிவசிதம்பரம் ஜூவல்லரி நிறுவனம் சார்பில் 2,000 மக்கன்றுகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: http://www.facebook.com/groups/thanjavur.nativies?ap=1

Posted in Labels: | 0 comments

சச்சினுக்கு பாரத் ரத்னா விருது

டெல்லி: இந்திய கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத் ரத்னா கிடைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

இதுவரை பாரத் ரத்னா விருதுக்குரிய பிரிவுகளில் விளையாட்டுத் துறை இல்லாமலிருந்தது. இப்போது இந்தத் துறையையும் சேர்க்க பிரதமர் அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சச்சினுக்காகவே இந்த பரிந்துரை என தகவல் வெளியாகியுள்ளதால், உலகெங்கும் உள்ள சச்சின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டுள்ளனர்.

ப சிதம்பரம் தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம்தான் இந்த பரிந்துரையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.

ஏற்கெனவே சச்சினுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரதமருக்கு வலியுறுத்தல் கடிதம் கொடுத்துவிட்டனர். மும்பை கிரிக்கெட் சங்கமும் பரிந்துரைத்துள்ளது.

எனவே இந்த ஆண்டே சச்சினுக்கு இந்த புதிய கவுரவம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதுவரை ஜவஹர்லால் நேரு, பெருந்தலைவர் காமராஜர், அமரர் எம்ஜிஆர், நெல்சன் மண்டேலா, டாக்டர் அப்துல் கலாம் உள்பட 41 தலைவர்கள் மற்றும் சாதனையாளர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

சூப்பர் ஸ்டார் சென்னை வருகை.

சிங்கப்பூர்: ரஜினி எப்போது வருவார் என்ற கேள்வியே ஓராயிரம் செய்திகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. இந்த கேள்வியைச் சுற்றிச் சுற்றியே கடந்த 30 நாட்களாக செய்திகள் வந்த வண்ணமுள்ளன.

இப்போது இந்த கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. ரஜினி எந்த நேரத்திலும் சென்னை திரும்பும் அளவுக்கு 100 சதவீதம் பழைய உடல்நிலை மற்றும் தெம்பைப் பெற்றுவிட்டார் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இதுநாள்வரை ரஜினியை வீட்டுக்கே போய் பார்த்து சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்துவந்த மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ரஜினி எப்போது வேண்டுமானாலும் நாடு திரும்பலாம் என்று கூறிவிட்டனர்.

இன்னும் ஓரிரு தினங்களில் ரஜினியைப் பார்க்கப் போகும் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ராணா படப்பிடிப்பு தொடங்குவது குறித்த அவரது ஆலோசனையைப் பெற்றுவிட்டு சென்னை திரும்புகிறார். அதைத் தொடர்ந்து சென்னை வரும் ரஜினி, ரசிகர்களைச் சந்தித்த பிறகு, படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்வார் என்று தெரிகிறது.

போயஸ் கார்டன் வீட்டில் புதுப்பிப்பு பணிகள் மும்முரம்

ரஜினி வருவதற்கு முன் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் வாஸ்துப்படி சில மாறுதல்களைச் செய்யும் வேலை மும்முரமாக நடக்கிறது. குறிப்பாக ரஜினியின் படுக்கை அறை, தியான அறை போன்றவற்றில் சில மாறுதல்கள் செய்யப்படுவதாக ரஜினி இல்ல நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Posted in Labels: | 0 comments

பொதுஅறிவு போட்டி


GK or DMK knowledge

save tamil fisher man






அன்பு தமிழர்களே ... இனியாவது விழித்துகொள்ளுங்கள்...!! சிங்களவன் , சீனன் துணையுடன்..!! 


இங்கே துணைவிக்கு சொத்து சேர்க்கும் கூட்டம்..!!




vote here,















http://www.savetnfisherman.org/

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...